Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: 'ஏப்., 20ம் தேதியில்இருந்து, 'அமேசான், பிளிப்கார்ட்' உள்ளிட்ட, 'ஆன்லைன்' சேவை நிறுவனங்கள் வாயிலாக, மொபைல் போன், 'டிவி, பிரிஜ்' போன்ற பொருட்களை வாங்கலாம்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இரண்டாவது முறையாக, அடுத்த மாதம், 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும், ஏப்., 20ல் இருந்து, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்வதற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ள துறைகளில், எலக்ட்ரானிக் துறையும் உள்ளது. இதன்படி, மொபைல் போன், 'டிவி, பிரிஜ், லேப்டாப்' போன்ற பொருட்களை, 'அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல்' போன்ற ஆன்லைன் சேவை நிறுவனங்கள் வாயிலாக, வரும், 20ம் தேதியிலிருந்து வாங்கலாம். ஆனாலும், ஆன்லைன் சேவை நிறுவனங்களின் டெலிவரி வேன்கள் இயங்கு வதற்கு அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும்.
தற்போது அத்தியாவசியமான சேவைகளுக்கான வாகனங்கள் இயங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சேவை நிறுவனங்களின் வேன்கள் இயங்குவதற்கு அனுமதி கிடைத்தால், ஆர்டர் செய்த பொருட்கள், தாமதமின்றி, மக்களின் வீடு தேடி வரும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.